புதுதில்லி: நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் மஹாரஷ்டிராவின் ரைகாத் மாவட்டத்தில் உள்ள பிரா என்னும் கிராமத்தில், நேற்று காலை 8 மணி நிலவரப்படி வெப்பத்தின் அள்வு 46.5 டிகிரி செல்ஸியஸ் பதிவாகியுள்ள சம்பவம் விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
வட இந்தியா முழுவதும் பலவேறு இடங்களில் கோடையின் தாக்கம் பொதுமக்களை வாட்டி வதைக்க ஆரம்பித்துள்ளது. அதற்கு சாட்சியாக பல்வேறு இடங்களில் வெப்ப நிலையிலானது வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்பபடி பதிவு செய்யப்பட்டுள்ள சில தகவல்க ளை மட்டும் இங்கே காணலாம்
மஹாரஷ்டிராவின் அகோலா என்னும் இடத்தில் வெப்ப நிலை 44.1 டிகிரி செல்ஸியஸ் ஆகவும், ராஜஸ்தானில் பார்மெரில் 43.4 டிகிரி ஆகவும், ஹரியானாவின் நரனால் என்னும் இடத்தில் வழக்கத்தை விட 9 டிகிரி கூடுதலாக 42 டிகிரியும் பதிவாகியுள்ளது.
அதேபோல பஞ்சாபின் லூதியானாவில் 7 டிகிரி அதிகரித்து 36.7 டிகிரியாக காணப்படுகிறது.
நாட்டின் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் வாரணாசி, அலகாபாத், ஹமிர்பூர் மற்றும் ஆக்ரா உள்ளிட்ட இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது 40 டிகிரியை கடந்து காணப்படுகிறது.
தலைநகர் தில்லியில் வெப்பநிலையானது வழக்கத்தை விட 6 டிகிரிகள் அதிகரித்து 38.2 ஆக உள்ளது. அதே போல மலைவாசஸ்தலமான டேராடூன் மற்றும் ஸ்ரீநகர் ஆகிய இடங்களில்கூட வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது.
ஆந்திராவின் ராயலசீமா பகுதிகளில் கடந்த சில நாட்களாக சராசரி வெப்ப நிலையானது 40 டிகிரிக்கும் அதிகமாகவே காணப்படுகிறது.
மஹாரஷ்டிராவின் ரைகாத் மாவட்டத்தில் சுற்றிலும் காடுகள் அடங்கிய ஸஹ்யதிரி மலைகளால் சூழப்பட்ட, பெரிய அணை ஒன்றின் அருகில் அமைந்துள்ள, பிரா என்னும் கிராமத்தில், நேற்று காலை 8 மணி நிலவரப்படி வெப்பத்தின் அள்வு 46.5 டிகிரி செல்ஸியஸ் பதிவாகியுள்ள சம்பவம் விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இங்குள்ள வானிலைஆய்வு மைய கிளையில் வெப்ப நிலையை பதிவு செய்பவர்கள் நேரடியான ஊழியர்கள் இல்லை என்றும், வானிலைஆய்வு மையத்தால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் என்றும், இதன் காரணமாக அங்கு பதிவாகியுள்ள அதிகபட்ச வெப்ப நிலை குறித்தது ஆராய உள்ளதாகவும், மும்பை கொலாபாவில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மைய பொறுப்பு இயக்குனர் எஸ்.ஜி,.காம்ப்ளே தெரிவித்துள்ளார்.
பொதுவாக மஹாரஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் 'லேசான வெப்ப அலை' உண்டாக இருப்பதாகவும், மத்திய பிரதேசத்தின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதியில் சில இடங்கள் மற்றும் சட்டிஸ்கரின் குறிப்பிட்ட சில இடங்கள் போன்றவற்றில் 'வெப்ப அலையின்' பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.