சென்னை: விரைவில் தேர்தல் நடைபெற உள்ள ஆர்.கேநகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வழக்கில் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தால் காலியாக உள்ள சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக இரு அணிகளாக அதிமுக அம்மா அணி மற்றும் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி என போட்டியிடுகின்றன. அதே போல திமுக, பாஜக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளும் போட்டியிடுகின்றன. இதில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக சரமாரியான குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வந்தன.
இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளில் அதிமுக அம்மா அணி (தினகரன்) ஆதரவாளர் கருணாமுர்த்தி என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர். அவர் பணம் கொடுக்கும் காட்சிகள் அடங்கிய விடியோவானது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. அந்த வீடியோவில் உள்ள மற்ற இருவர் பற்றிய விசாரனை தற்பொழுது நடைபெற்று வருகிறது.