புதுதில்லி: தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றத்துடன் மோதல் போக்குடன் செயல்பாட்டுக்கு கொண்டிருக்கும் நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும் என்று தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான உச்ச நீதி மன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் சி.எஸ்.கர்ணன். இவர் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி அன்று உச்ச நீதின்ற நீதிபதிகள் குறித்து ஊழல் குற்றசாட்டு கூறியதுடன் தலைமை நீதிபதியிடமும் புகார் தெரிவித்து கடிதமும் எழுதினார். இதன் காரணமாக உச்ச நீதின்றமானது இவர் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. மேலும் நீதிபதிகள் குறித்த அவதூறுகளை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் கர்ணன் தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தார்.
உச்ச கட்டமாக கடந்த மாதம் 13-ஆம் தேதி அன்று தன் மீதான வழக்கினை விசாரித்த ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வானது வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவுகளை மீறியதாக குற்றம் சாட்டி அவர்களனைவரும் ஏப்ரல் 28-ஆம் தேதி தன் முன்னால் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி கர்ணன் உத்தரவு பிறப்பித்தார்.
இதன் தொடர்ச்சியாக இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
உடனடியாக மருத்துவக் குழு ஒன்றை உருவாக்கி நீதிபதி கர்ணனுக்கு வரும் 4-ஆம் தேதியன்று மனநல மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். அந்த பரிசோதனையின் முடிவானது வரும் 9-ஆம் தேதியன்று இந்த வழக்கின் விசாரணைநடைபெற இருப்பதால், அதற்கு முன்னதாக 8-ஆம் தேதியன்று தாக்கல் செய்யபட வேண்டும்.அத்துடன் கொல்கத்தா மாநில டி.ஜி.பி உடனடியாக காவல் குழு ஒன்றை உருவாக்கி மருத்துவ குழு தனது கடமையை நிறைவேற்றுவதற்கு உதவ வேண்டும்.
மேலும் நீதிபதி கர்ணன் பிறப்பிக்கும் உத்தரவுகள் எதனையும் இந்தியாவின் எந்த ஒரு அமைப்போ அதிகாரிகளோ பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை
இவ்வாறு ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த தீர்ப்பினை கேள்விப்பட்ட நீதிபதி கர்ணன் தனக்கு மனநல பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்த ஏழு நீதிபதி களுக்குத்தான் மனநல பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.