ஜின்ட் (ஹரியானா): வளர்ச்சியை உருவாக்காத ஹரியானா காங்கிரஸ் தலைவர்களை காலணியால்தான் தாக்க வேண்டும் என்ற குருஷேத்ரா தொகுதி பாஜக எம்பி ராஜ்குமாரின் பேச்சு சர்சையைக் கிளப்பியுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் உள்ள குருஷேத்ரா தொகுதியின் எம்பி ராஜ்குமார்.இவர் பாஜகவினைச் சேர்ந்தவர். இவர் அங்குள்ள ஜின்ட் மாவட்டத்தின் சிங்ஹானா கிராமத்தில் அம்பேத்காரின் 126-ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்ட ராஜ்குமார் பேசியதாவது:
காங்கிரஸ் கட்சி ஹரியானாவில் பலமுறை ஆட்சி செய்திருக்கிறது. மக்களுக்கு அது எந்த ஒரு முன்னேற்றத்தையும் கொண்டு வரவில்லை. மக்களை தற்பொழுது பிச்சைக்காரர்கள் ஆக்கியிருக்கிறது. தற்பொழுது பாஜக ஆட்சிக்கு வந்த உடன், மக்கள் தவறான ஒரு முடிவை எடுத்து விட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. இது போல வளர்ச்சியை உருவாக்காத ஹரியானா காங்கிரஸ் தலைவர்களை காலணியால்தான் தாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
அத்துடன் மாநிலத்தில் மக்களிடையே நிலவிய சுமுகத் தன்மையை சீரழித்ததில் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங்க் ஹூடாவுக்கு பெரும் பங்கு உண்டு என்றும் ராஜ்குமார் குற்றம் சாட்டினார், அத்துடன் இட துக்கீட்டினை பொறுத்த வரையில், ஜாதிகளின் அளவிற்கேற்ப இட ஒதுக்கீட்டினை தான் ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.