மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயுவின் விலை உருளை ஒன்றுக்கு ரூ. 2 உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், மண்ணெண்ணெயின் விலை லிட்டருக்கு 26 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருவதாக அரசு எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதன்படி, தில்லியில் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ. 1.87 உயர்வுக்குப் பின் ரூ. 442.77-ஆக மாறியுள்ளது.
கடந்த ஏப்ரல் முதல் தேதி மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயுவின் விலை ரூ. 5.57 அளவுக்கு உயர்த்தப்பட்டது. எனினும், 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
அதற்கு முன்பு, சமையல் எரிவாயுவின் விலை உருளை ஒன்றுக்கு சுமார் ரூ. 2 வீதம் 8 மாதங்களுக்கு உயர்த்தப்பட்டது.
விலைக் குறைப்பு: மானியமில்லா சமையல் எரிவாயுவின் விலை உருளை ஒன்றுக்கு ரூ. 92 குறைக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் விலை உயர்வு: மண்ணெண்ணெயின் விலை லிட்டருக்கு 26 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்குப் பின் மும்பையில், ஒரு லிட்டர் மண்ணெண்ணெயின் விலை ரூ. 19.55 ஆக உள்ளது. ஒவ்வொரு மாதமும், மண்ணெண்ணெயின் விலை லிட்டருக்கு 25 பைசா வீதம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், விமான எரிபொருளின் விலை 0.4 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, விமான எரிபொருளின் விலை கிலோ லிட்டருக்கு ரூ. 51,696-ஆக உள்ளது.