புது தில்லி: துருக்கி அதிபர் ரீசப் தாயீப் எர்டோகன் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அவர் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார்.
தில்லி விமான நிலையத்தில், அவருக்கு நேற்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. துருக்கி அதிபருடன், அவருடைய மனைவி எமின் எர்டோகன், மூத்த அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், 150 பேர் அடங்கிய தொழில் - வர்த்தகக் குழுவினர் உள்ளிட்டோர் உடன் வந்துள்ளனர்.
துருக்கியில் தனது அதிகாரங்களை வலுப்படுத்தும் நோக்கில் கடந்த 16-ஆம் தேதி நடைபெற்ற சர்ச்சைக்குரிய வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின்பு, தாயீப் எர்டோகன் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவேயாகும்.
இரு நாட்டு வர்த்தக அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் எர்டோகன் கலந்து கொள்கிறார். பிரதமர் நரேந்திர மோடியை இன்று திங்கள்கிழமை சந்தித்துப் பேச உள்ளார். அப்போது, இந்தியா - துருக்கி இடையேயான பொருளாதார, வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதிக்க உள்ளனர்.
அணுசக்தி வழங்கும் நாடுகள் கூட்டமைப்பில் துருக்கி உறுப்பினராக உள்ள நிலையில், இந்தியாவை அதில் பங்கேற்கச் செய்வது தொடர்பாக இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இதையடுத்து, எர்டோகன், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும் சந்தித்து உரையாட உள்ளார்.