உடல் எடையைக் குறைப்பதற்காக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எகிப்து நாட்டைச் சேர்ந்த பெண், உயர் சிகிச்சைக்காக வியாழக்கிழமை துபை புறப்பட்டார்.
எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் இமான் அகமது (37). இவரது உடல் எடை சுமார் 498 கிலோவாக இருந்தது. உலகிலேயே அதிக எடைகொண்ட பெண்ணாக இமான் அறியப்பட்டு வந்தார்.
இந்நிலையில், தனது உடல் எடையால் மிகவும் அவதிக்குள்ளான இவர், எடை குறைக்கும் சிகிச்சையைப் பெற விரும்பினார். பின்னர், இந்த சிகிச்சைக்காக இந்தியா வந்த அவர், மும்பையில் உள்ள சைஃபி மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி மாதம் அனுமதிக்கப்பட்டார்.
எழுந்து நடக்க முடியாத அளவுக்கு உடல் எடையுடன் இருந்த இமானுக்கு, சைஃபி மருத்துவமனையின் 15 மருத்துவர்கள் அடங்கிய குழு அவருக்கு சிகிச்சை அளித்தது. இந்த சிகிக்சையின் பயனாக, அவரது உடல் எடை படிப்படியாக குறைந்து 170 கிலோவானது.
எனினும், இந்த சிகிச்சையால் அவர் பூரண நலம் பெறவில்லை என அவரது குடும்பத்தினர் கருதினர். இதனைத் தொடர்ந்து, துபையில் உள்ள ஒரு மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக இமானை கொண்டு செல்ல அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
இதையடுத்து, மும்பை சைஃபி மருத்துவமனையிலிருந்து இமான் அகமது, வியாழக்கிழமை பிற்பகல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் அவர் மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு அவசர ஊர்தி மூலமாக கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து மாலை 6 மணியளவில் துபை விமானத்தில் இமான் புறப்பட்டார்.