ஆந்திரம் மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை 4.57 மணிக்கு ஜிசாட்9 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்09 ராக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்ணுக்கு செலுத்தப்படவுள்ளது.
இதற்கான கவுன்ட்டவுன் ஸ்ரீஹரிகோட்டாவில் வியாழக்கிழமை பகல் 12.57 மணிக்கு தொடங்கியது.
தெற்காசிய நாடுகளின் பயன்பாட்டுக்காக ஜிசாட் 9 செயற்கைக்கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். தெற்காசிய மண்டல நாடுகளில் பாகிஸ்தானைத் தவிர, மற்ற நாடுகளின் கூட்டுத் திட்டத்தில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 230 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், தகவல் தொடர்புக்கு உதவும் 12 கே.யு. பேண்ட் கருவிகளைச் சுமந்து செல்கிறது. இதன் ஆயுள் காலம் 12 ஆண்டுகளாகும். தெற்காசிய நாடுகளில் ஏற்படும் பேரழிவு தொடர்பான தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கும் வல்லமை கொண்ட இந்த செயற்கைக்கோள், ஜி.எஸ்.எல்.வி. எஃப்09 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது.
ஊடகங்களுக்கு அனுமதியில்லை: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமான இந்த ஜிசாட்9 செயற்கைக்கோள் திட்டத்தை நேரில் காண பத்திரிக்கை மற்றும் காட்சி ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏவப்படக் கூடிய ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் குறித்த விவரங்களை இஸ்ரோ தனது இணையதளம், சமூக ஊடகங்களில் செய்தியாக வெளியிடும். ஆனால், இம்முறை ராக்கெட் கவுன்ட்டவுன் நேரம் மட்டுமே வெளியிட்டது. ராக்கெட் வெள்ளிக்கிழமை ஏவப்படும் நேரம் கூட தனது இணையதள பக்கத்தில் தெரிவிக்கவில்லை. இஸ்ரோ விஞ்ஞானிகளும் இது குறித்த தகவல்களை தர மறுத்துவிட்டனர்.