திருப்பதி: திருப்பதியில் ரூ.140 கோடி மதிப்பீட்டில் புதிய புற்றுநோய் மருத்துவமனை ஏற்படுத்தப்பட உள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவ ராவ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
ஆந்திர அரசு திருப்பதியை உலகத் தரம் வாய்ந்த மருத்துவ மையமாக மாற்ற பல மருத்துவமனைகளை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி, அரவிந்த் கண் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் இன்னும் 15 நாள்களில் தொடங்கப்பட உள்ளது.
இதேபோல் டாடா குழுமம் திருப்பதியில் புற்றுநோய் மருத்துவமனையை ஏற்படுத்த உள்ளது. இதற்காக திருப்பதி எஸ்.வி. வேதிக் பல்கலைக்கழகம் அருகே தேவஸ்தானம் 25 ஏக்கர் நிலத்தை குத்தகை அடிப்படையில் டாடா நிறுவனத்துக்கு ஒதுக்கி உள்ளது.
இங்கு ரூ.140 கோடி செலவில் உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய் மருத்துவமனை ஏற்படுத்தப்பட உள்ளது. இதில், ரூ.100 கோடி டாடா நிறுவனமும், ரூ.40 கோடியை நன்கொடை மூலம் வசூல் செய்ய உள்ளதாகவும் சாம்பசிவ ராவ் தெரிவித்தார்.