கோரக்பூர்: உத்தரபிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை அப்புறப்படுத்தியது தொடர்பான விவாதத்தில், எம்.எல்.ஏவின் பேச்சால் காயப்பட்ட பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் கண்ணீர் விடும் வீடியோவானது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ளது கரீம்நகர் பகுதி. இங்கு அமைந்துள்ள மதுபானக்கடை ஒன்றினை அகற்றுவதற்காக பொதுமக்கள் கூடி போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த வட்டார காவல்துறை அதிகாரி சாரு நிகம், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினார். அப்பொழுது பெண்கள் மற்றும் முதியவர்கள் சிலர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக புகார் எழுந்தது.
தகவல் கேள்விப்பட்டஉடன் கரீம் நகர் தொகுதி எம்.எல்.ஏ ராதா மோகன் தாஸ் அகர்வால் அங்கு வந்தார்.சம்பவ இடத்தில் பணியில் இருந்த வட்டார காவல்துறை அதிகாரி சாரு நிகம் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கணேஷ் சஹா ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்பொழுது பெண் அதிகாரியான சாரு நிகமை நோக்கி அவர் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதாக த் தெரிகிறது.
இதன் காரணமாக ஆக்ரோஷமாக பதிலளித்த சாரு ஒரு கட்டத்தில் மனம் கலங்கி, தன் கையில் உள்ள கைக்குட்டையைக் கொண்டு பெருகும் கண்ணீரை துடைத்துக் கொள்ளூம் காட்சிகள் கொண்ட விடியோவானது தற்பொழுது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக சாரு நிகம் தன்னுடைய முகநூல் பதிவில் எம்.எல்.ஏ ராதா மோகன் தாஸ் அகர்வால் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், தான் ஒரு பெண் காவல்துறை அதிகாரியுடன் பேசிக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் அவர் நடந்து கொண்டதாகவும் புகார் தெரிவித்தார். மேலும் தான் பலவீனமானவள் இல்லை எனவும், கண்ணீரானது தனக்காக மேலதிகாரி கணேஷ் சஹா ஆதரவு தெரிவித்து வாதாடியதால் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் உண்டானது என்றும் தெரிவித்தார். அத்துடன் தனக்காக துணை நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ ராதா மோகன் தாஸ், தான் தவறாக எதுவும் நடந்து கொள்ளவில்லையென்று குற்றசாட்டைமறுத்த அவர், உண்மையில் தான் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கணேஷ் சஹாவுடன்தான் வாக்குவாதம் செய்ததாக குறிப்பிட்டார்.மேலும் வட்டார காவல்துறை அதிகாரி சாரு நிகம்தான் போராட்டக்காரர்களை தவறான முறையில கையாண்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.