மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி மறுத்ததாக வெளியான தகவலுக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்துக்கு சீன முதலீடுகளைக் கொண்டு வரும் நோக்கில் அந்நாட்டுக்கு மம்தா பானர்ஜி பயணம் மேற்கொள்ள இருப்பதாக கடந்த மாதம் தகவல் வெளியானது. இந்நிலையில், அவர் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதியளிக்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு மம்தா பானர்ஜியிடம் இருந்து இதுவரை கோரிக்கை எதுவும் வரவில்லை. இந்நிலையில், அவரது கோரிக்கையை வெளியுறவு அமைச்சகம் நிராகரித்துவிட்டதா? என்ற கேள்வி எழுவதற்கு வாய்ப்பே இல்லை என்றார் அவர்.