கான்பூர்: உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரில் தன்னுடைய 102-வயது மாமியாருக்கு, 80-வயது மருமகள் அன்னையர் தின பரிசாக, தான் வளர்த்த ஆடுகளை விற்று கழிப்பறை கட்டிக்கொடுத்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தனா. இவரது வயது 80. இவருடைய மாமியாருக்கு வயது 102. அன்னையர் தினமான நேற்று சாந்தனா தன்னுடைய மாமியருக்கு ஒரு எதிர்பாராத பரிசினை வழங்கியுள்ளார்.
சமீபத்தில் பொதுவெளியில் மலம் கழிக்கச் சென்ற தனது மாமியாருக்கு கால் தடுக்கி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டதால், அவருக்கு உதவவும் வகையில் வீட்டிலேயே கழிப்பறை கட்ட சாந்தனா முடிவெடுத்துள்ளார்.இதற்காக மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்ட அதிகாரிகளை அவர் அணுகியுள்ளார். ஆனால் அவர்களிடம் இருந்து சரியான உதவிகள்கிடைக்கவில்லை .
ஆனால் தன்னுடைய எண்ணத்தில் தளராத சாந்தனா கழிப்பறை கட்டுவதற்காக தான் வளர்த்து வந்த 5 ஆடுகளை விற்று பணம் திரட்டினார். அதனைக் கொண்டு தன் மாமியாருக்கு ஒரு கழிப்பறையை கட்டியுள்ளார்.
அன்னையர் தின பரிசாக அவரது இந்த முயற்சியானது மனதினைநெகிழ்ச்சி செய்வதாக உள்ளது.