ரோஹ்தக்கில் வளர்ப்பு தந்தையால் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்ட 10 வயது சிறுமியின் கரு 20 வாரங்களைக் கடந்து விட்ட போதிலும், அவளுக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ரோஹ்தக்கில், வளர்ப்பு தந்தையால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான சிறுமி பற்றிய தகவல் கடந்த வாரம்தான் வெளிச்சத்துக்கு வந்தது. அப்போதே, அவர் இந்தியாவில் கருக்கலைப்பு செய்ய அதிகபட்ச கால கட்டமான 20 வாரங்களைக் கடந்திருந்தார். அதன்பிறகு, குழந்தைக்கோ அல்லது தாயின் உயிருக்கோ ஆபத்து இருந்தால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய அனுமதிப்பது இந்தியாவில் வழக்கம்.
இது குறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம், சிறுமியை பரிசோதித்து கருக்கலைப்பு செய்யலாம் என்று தீர்மானித்தால் உடனே செய்யவும் என்று அனுமதி வழங்கியிருப்பதாக இந்த வழக்கை விசாரித்து வரும் காவல்துறை அதிகாரி கரிமா தேவி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள சிறுமியின் வளர்ப்பு தந்தையை மன்னித்துவிட்டுவிடும்படி, அவரது மனைவி கோருகிறார். மகளின் வாழ்க்கை சீரழிந்துவிட்டது. உண்மைதான். ஆனால், என் குடும்பத்தில் சம்பாதிப்பவர் அவர் மட்டுமே. என் மற்ற பிள்ளைகளையும் நான் பார்க்க வேண்டுமே. அவர்களது வருங்காலம் கேள்விக்குறியாகிவிடுமே என்கிறார்.
பலாத்கார சம்பவங்களில் இந்தியாவின் தலைநகர் புது தில்லி முன்னணியில் உள்ளது. இங்கு 2015ம் ஆண்டு மட்டும் 2,199 பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன. இதன் சராசரி ஒரு நாளைக்கு 6 பலாத்கார சம்பவங்கள் என்பதும், 2014ம் ஆண்டு புள்ளி விவரத்தின்படி, உலக அளவில் பாலியல் பலாத்கார சம்பவங்களால் பாதிக்கப்படும் 3 பெண் குழந்தைகளில் 1 குழந்தை இந்தியாவைச் சேர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.