புது தில்லி: ஜம்மு-காஷ்மீர் மாநில பாதுகாப்பு நிலவரம் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
கடந்த சில நாள்களாக பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையோர கிராமங்களைக் குறிவைத்து ராக்கெட் குண்டுகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருகிறது. இதையடுத்து, காஷ்மீர் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இப்போது காஷ்மீரில் முகாமிட்டுள்ள ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத், அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ராணுவ அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி 26 முறை இந்தியப் பகுதிகளைக் குறிவைத்து தாக்குதல்களை நடத்தியுள்ளனர். கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலகட்டத்தில் காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 27 பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இந்நிலையில், நிதி மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் அருண் ஜேட்லி ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் காஷ்மீரில் ஆலோசனை நடத்தி வருகிறார். பாதுகாப்பு நடவடிக்கை, காஷ்மீரில் நடைபெறும் தேடுதல் வேட்டை குறித்து இருவரும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக 18,19-ஆகிய தேதிகளில் அருண் ஜேட்லி ஸ்ரீநகருக்குச் செல்ல இருப்பதாகவும், அப்போது, பாதுகாப்பு ஆய்வுக் கூட்டமும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.