திருவனந்தபுரம்: கடந்த வருடம் மர்ம மரணமடைந்த பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணியின் மரணம் குறித்த வழக்கு சி.பி,.ஐக்கு மாற்றப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவில் பிரபலமான நடிகராக விளங்கிய கலாபவன் மணி, கடந்த ஆண்டு மார்ச் 6-ஆம் தேதி திடீரென உயிரிழந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கலாபவன் மணியின் சகோதரரும், மனைவியும் புகாரளித்தனர்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், அவரது உடலில் நச்சு கலந்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு கலாபவன் மணியின் உறவினர்கள் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
கடந்த மாதம் நடைபெற்ற அந்த மனு மீதான விசாரணையின்போது, சிபிஐ தரப்பில் சில காரணங்கள் முன்வைக்கப்பட்டன. வேலைப் பளுவும், நிலுவையில் பல வழக்குகளும் தங்களுக்கு இருப்பதால் இந்த விவகாரத்தைக் கூடுதலாக விசாரிக்க இயலாது என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ஆனால் நிறைய வேலைப் பளு இருப்பதால் கலாபவன் மணி வழக்கை விசாரிக்க முடியாது என்று சிபிஐ கூறிய காரணத்தை ஏற்றுக் கொள்ளாத நீதிமன்றமானது, இந்த விவகாரத்தை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சிபிஐ அமைப்புக்கு உத்தரவிட்டது. மேலும் மாநில போலீஸார் விசாரித்து வரும் இந்த வழக்கை ஒரு மாதத்துக்குள் தங்கள் வசம் சிபிஐ எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அப்பொழுது நீதிபதி தெரிவித்தார்.
அதன்படி கலாபவன் மணியின் மரணம் குறித்த வழக்கு இன்று அதிகாரப்பூர்வமாக சி.பி,.ஐக்கு மாற்றப்பட்டுள்ளது.