புது தில்லி: இந்தியாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் கூடுதலாக 1.7 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட இருப்பதாக தொழிற்துறை அமைப்பான நாஸ்காம் அறிவித்துள்ளது.
மேலும், கடந்த ஓராண்டில் குறிப்பாக 2016-2017ம் இறுதி காலாண்டில் சுமார் 50 ஆயிரம் பணி வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், 2017ம் ஆண்டு முதல் மூன்று மாதத்தில் புதிய பணி வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பெரிய அளவில் ஊழியர்கள் வெளியேற்றம் நடைபெறப் போவதாக ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகிக் கொண்டிருக்கும் நிலையில், நாஸ்காம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில் 20 முதல் 25 லட்சம் வேலை வாய்ப்புகள் புதிதாக உருவாக்கப்படும் என்றும் அது ஆரூடம் கூறியுள்ளது.
அமெரிக்காவின் கொள்கை முடிவால், இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்கள், தங்களது நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு பிங்க் ஸ்லிப் வழங்கி வருவதாக தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டிருந்தன.
தகவல் தொழில்நுட்பத் துறையின் முக்கிய இடத்தில் இந்தியா உள்ளது. 2001ம் ஆண்டு 4.3 லட்சமாக இருந்த பணி வாய்ப்பு, தற்போது 40 லட்சமாக உயர்ந்துள்ளது என்று நாஸ்காம் தலைவர் ஆர். சந்திசேகர் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்ந்து வளர்ந்து கொண்டே தான் இருக்கும். 2025ம் ஆண்டில் பணிவாய்ப்பு என்பது 60 - 65 லட்சமாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.