வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செல்லும் மத்திய அமைச்சர்கள், அந்த மாநிலங்களில் கட்டாயம் ஒரு நாள் இரவு நேரத்தில் தங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்குப் பிராந்தியத்தில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மத்திய அமைச்சர்கள் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்ற திட்டத்தை பிரதமர் அலுவலகம் வெளியிட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தில்லியில் மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
வடகிழக்கு பிராந்தியத்தில் சுற்றுலாவையும், வளர்ச்சியையும் இணைப்பது மற்றும் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கான சுற்றுலா மையமாக அந்தப் பகுதியை உருவாக்குவதும், அந்தப் பகுதியை பாதுகாப்பானது என்பதை உணர்த்துவதும் பிரதமர் நரேந்திர மோடியின் இலட்சியமாகும்.
இதை உறுதி செய்யும் வகையில், மத்திய அமைச்சர்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதாவது, வடகிழக்குப் பிராந்தியத்தில் மத்திய அமைச்சர்கள் சுற்றுப்பயணம் செய்வதோடு மட்டுமல்லாமல், அந்த மாநிலங்களில் கட்டாயம் ஒரு நாள் இரவு தங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் என்று மகேஷ் சர்மா தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவைத் தொடர்ந்து, அஸ்ஸாம் மாநிலத்தின் குவாஹாட்டில் கடந்த மாதம் முதல்வாரத்தில் சுற்றுப்பயணம் செய்த மகேஷ் சர்மா, அங்கு நமாமி பிரம்மபுத்திரா திருவிழாவில் கலந்து கொண்டார். மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜுவும் விழாவில் கலந்து கொண்டார்.
மணிப்பூரில் சனிக்கிழமை நடைபெறவுள்ள சிரோய் லில்லி விழாவில் கலந்து கொள்வதற்காக மகேஷ் ஷர்மா செல்லவுள்ளார். வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) ஜிதேந்திர சிங், அந்தப் பிராந்தியத்தில் விரைவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்ததன் 3-ஆவது ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளும், வடகிழக்குப் பிராந்தியத்தில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்படலாம் எனத் தெரிகிறது.
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, திரிபுராவில் அண்மையில் சுற்றுப்பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.