உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு காரணமாக, பத்ரிநாதுக்கு புனித யாத்திரை சென்ற சுமார் 2,000 பக்தர்கள் பாதிப்படைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் ஜோஷி சனிக்கிழமை கூறியதாவது:
சமோலி மாவட்டத்திலுள்ள ஹாத்தி மலையில் வெள்ளிக்கிழமை திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், பெரும் பாறைகள் உருண்டு விழுந்து, ரிஷிகேஷிலிருந்து பத்ரிநாத் செல்லும் நெடுஞ்சாலையில் தடையை ஏற்படுத்தின.
இதையடுத்து, பத்ரிநாத்துக்கு புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த சுமார் 2,000 பக்தர்கள் நடுவழியில் சிக்கித் தவித்தனர். அவர்களில் 800 பேர் மட்டும் தங்களது பயணத்தைத் தொடர்கின்றனர்.
தற்போதைய நிலவரப்படி, விஷ்ணுபிரயாகை, பாண்டுகேஸ்வர், கோவிந்த்காட் ஆகிய நகரங்களின் பல்வேறு பகுதிகளில் 1,200 பேர் சிக்கியுள்ளனர்.
அவர்களுக்கு உணவுப் பொருள்களும், தங்கும் வசதியும் வழங்க அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
நிலச்சரிவு காரணமாக துண்டிக்கப்பட்ட நெடுஞ்சாலையைச் சரிசெய்யும் பணியில் எல்லைச் சாலைப் பணி அமைப்பினர் (பிஆர்ஓ) போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் அந்த நெடுஞ்சாலை மீண்டும் திறக்கப்படும்.
இந்த நிலச்சரிவால் 15,000 புனிதப் பயணிகள் நடுவழியில் சிக்கித் தவித்து வருவதாக முதலில் ஊடகங்களில் வெளியான தகவல் முற்றிலும் தவறானதாகும் என்றார் அவர்.