பாகிஸ்தான் உளவாளி ராஜஸ்தானில் கைது
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ராஜஸ்தானில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்காக உளவு பார்த்ததாக, ஜெய்ஸல்மர் மாவட்டத்தின் குஞ்சாரலி கிராமத்தில் வசிக்கும் ஹாஜி கான் (55) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
இதுவரை 3 முறை பாகிஸ்தான் சென்று திரும்பியுள்ள அவரிடமிருந்து, முக்கியமான, ரகசியத் தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்று போலீஸார் தெரிவித்தனர்.
இந்திய ராணுவம் மற்றும் விமானப் படை தொடர்பான ரகசியத் தகவல்களைப் பெற்று, அவற்றை அவர் பாகிஸ்தானுக்கு அளித்து வந்ததாக இந்திய உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு தொடக்கத்தில் அரசாங்க ரகசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஹாஜி கான் குறித்த உண்மைகள் தெரிய வந்தன. அதனைத் தொடர்ந்து, அவரை உளவுத் துறையினர் ரகசியமாகக் கண்காணித்து வந்தனர் என்று உளவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.