லக்னோ: உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைகவசம் (ஹெல்மெட்) அணியாவிட்டால் நாளை திங்கள்கிழமை முதல் (மே 22) பங்குகளில் பெட்ரோல், டீசல் எரிபொருள்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது என்று புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைகவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து பல முறை வலியுறுத்தப்பட்டது.
தலைகவசம் அணிய வேண்டியது கட்டாயம் என அரசு கடுமையான சட்டம் கொண்டு வந்தும் தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவோரின் எண்ணிக்கை குறையவில்லை.
மேலும், போக்குவரத்து விதிமுறைகளை அனைவரும் கட்டாயமாக பின்பற்றும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தலைகவசம் அணியாதவர்களுக்கு பங்குகளில் பெட்ரோல், டீசல் எரிபொருட்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது என்ற உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
இதுதொடர்பாக காவல்துறை மூத்த அதிகாரி தீபக் குமார், கடந்த சில நாட்களுக்கு முன்பு லக்னோ பெட்ரோல் பங்கு டீலர்கள் சங்கத்தினரை அழைத்து பேசினார்.
லக்னோவில் செயல்பட்டு வரும் 200 பங்குககளில், தலைகவசம் அணியாமல் வருபவர்களுக்கு எரிபொருள் அளிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு கடந்த வாரம் இந்த உத்தரவை பிறப்பித்து இருந்தது.
யோகி ஆதித்யநாத் பதவியேற்ற நாள் முதல் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவருடைய அதிரடி அறிவிப்புகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவிலுள்ள திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய 3 நகரங்களில் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல், தலைகவசம் அணியாவிட்டால் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல், டீசல் வழங்கப்பட மாட்டாது என கேரள அரசு கடந்த ஆண்டு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.