பெங்களூரு: 1990ம் ஆண்டுகளில் பெங்களூரு சாலைகளில் ஓடிய இரட்டை அடுக்கு (டபுள் டக்கர்) பேருந்துகள் மீண்டும் கட்டமைக்கப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் சாலைகளில் இயக்கப்பட உள்ளது.
பெங்களூருவாசிகளுக்கு மிகவும் பிடித்த இரட்டை அடுக்கு பேருந்தின் மேல் தளத்தில் முதல் சீட்டைப் பிடிக்க முண்டியடிக்காதவர்களே இருக்க முடியாது.
1970 ம் ஆண்டு முதல் 1990 வரை பெங்களூரு சாலைகளை அலங்கரித்த இரட்டை அடுக்கு பேருந்துகள், சாலைப் போக்குவரத்தில் இருந்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. 1980ம் ஆண்டில், பள்ளிச் சிறார்களை ஏற்றிக் கொண்டுச் சென்ற இரட்டை அடுக்கு பேருந்து, சாலை வளைவில் திரும்பும் போது எதிர்பாராதவிதமாக பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது இரட்டை அடுக்கு பேருந்து சேவையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இதையடுத்து கொஞ்சம் கொஞ்சமாக இரட்டை அடுக்கு பேருந்துகள் சாலைப்போக்குவரத்தில் இருந்து அகற்றப்பட்டது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் இரட்டை அடுக்கு பேருந்துகளை இயக்க பெங்களூரு மாநகராட்சி சாலைப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 4 அல்லது 5 இரட்டை அடுக்கு பேருந்துகளை வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக ஒரே ஒரு இரட்டை அடுக்கு பேருந்து மட்டும் சுற்றுலாப் பயணிகளுக்காக 2014ம் ஆண்டு வரை இயக்கப்பட்டு வந்தது. இஸ்கான் கோயில், கவி கந்தேஸ்வரா கோவில், எம்ஜி சாலை, திப்பு கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டு வந்தது.
எனவே, தற்போது புதிதாக வாங்கப்படும் இரட்டை அடுக்கு பேருந்துகள் பொதுப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படுமா அல்லது சுற்றுலாவுக்காக பயன்படுத்தப்படுமா என்பது உறுதி செய்யப்படவில்லை.