பாட்னா: பாட்னா மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இளநிலை மருத்துவர்களின் திடீர் போராட்டத்தின் காரணமாக, ஏழு நோயாளிகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ளது பாட்னா மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை. இங்கு கடந்த வாரம் நடைபெற்ற இளநிலை மருத்துவர்களுக்கான கவுன்சிலிங்கில் தகராறு ஏற்பட்டது. மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். நிலைமையை சமாளிக்க உள்ளே புகுந்த காவல்துறை தடியடி பிரயோகம் செய்து நிலையை கட்டுக்குள் கொண்டு வந்தது. இந்த தடியடியில் இளநிலை மருத்துவர்கள் சிலருக்கு காயமுண்டானது. சிலர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.
இந்நிலையில் செவ்வாய் நள்ளிரவிலிருந்து பயிற்சி மருத்துவர்கள் திடீர் என்று 24 மணி நேர போராட்டத்தில் குதித்தனர். தங்களை தாக்கிய காவல்துறையினர் மீதுநடவடிக்கை எடுக்கக் கோரியும், அப்பாவி மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள எப்.ஆர்.களை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
அவர்களின் இந்த போராட்டத்தினால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.இந்நிலையில் இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக பாட்னா மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அதிகாரியொருவர் செய்தியாளர்களிடம் பேசியாதாவது:
இளநிலை மருத்துவர்களின் திடீர் போராட்டத்தின் காரணமாக, போதிய சிகிச்சை கிடைக்காமல் அவசர சிகிச்சை பிரிவிலிருந்த 7 நோயாளிகள் மரணம் அடைந்திருக்கின்றனர். அதே போல் அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் வெளிநோயாளிகள் பிரிவின் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள து. இதன் காரணமாக பதட்டமான சூழல் நிலவுகிறது.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.