புதுதில்லி : உத்தரகண்ட் மாநிலம் பாகீரதி ஆற்றில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த 22 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரைச் சேர்ந்த யாத்ரீகர்கள் குழு உத்தரகண்ட் மாநிலத்தில் ஆன்மிக சுற்றுலா மேற்கொண்டது. அவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை (மே 23) கங்கோத்ரி கோயிலுக்கு சென்றுவிட்டு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
உத்தரகாசி அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையில் இருந்து 300 மீட்டர் பள்ளத்தில் உருண்டு, பாகீரதி ஆற்றில் விழுந்தது. இதில், 22 பேர் பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
பேருந்தில் 29 பேர் வரை இருந்ததாகத் தெரிகிறது. எனவே, எஞ்சியோரை தேடும் பணியும், ஆற்றுக்குள் விழுந்த பேருந்தை வெளியே கொண்டு வரும் முயற்சியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உயிரிழந்த 22 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
ஏற்கனவே, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நஷ்டஈடு வழங்கப்படும் என மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.