உத்தரப்பிரதேசத்தில் நேற்று இரவு காரில் சென்று கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்களை பலாத்காரம் செய்து அவர்களது நகைகளைக் கொள்ளையடித்த கும்பல், இதனை தடுக்க முயன்றவரை சுட்டுக் கொன்றது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஜேவர் - புலந்த்ஷஹர் நெடுஞ்சாலையில் நேற்று இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.
முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த 4 பெண்கள் உட்பட 8 பேர் கொண்ட குடும்பத்தினர் கிரேட்டர் நொய்டாவின் ஜேவரில் இருந்து உறவினரைப் பார்க்க புலந்த்ஷஹர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
சபோடா கிராமத்துக்கு அருகே குற்றவாளிகள், இவர்களது வாகனத்தின் டயரைய பங்சர் செய்துள்ளனர். இரவு 1.30 மணியளவில் காரை முற்றுகையிட்ட குற்றவாளிகள் கையில் இரும்புக் கம்பி, கத்தி, நாட்டுத் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வைத்திருந்தனர்.
அவர்கள் காரில் இருந்த 50 வயது மூதாட்டி உட்பட 4 பெண்களையும் பலாத்காரம் செய்தனர். அப்போது அதனை தடுக்க முயன்ற நபரை குற்றவாளிகள் சுட்டுக் கொன்றனர். பிறகு, அவர்கள் வைத்திருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு குற்றவாளிகள் தப்பியோடினர்.
இந்த சம்பவத்தின் போது, குற்றவாளிகள், அந்த குடும்பத்தினரை அடித்து மிதித்துள்ளனர்.
அப்போது, அங்கே காவல்துறை வாகனம் வந்ததை அடுத்து, அவர்கள் துப்பாக்கியால் சுட்டபடியே தப்பியோடினர்.
இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகிறோம். பாதிக்கப்பட்ட பெண்கள் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
கொள்ளையர்கள் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக எங்கள் குடும்பத்தினரை துன்புறுத்தினர். ஆனால் காவல்துறையினர் மிகவும் தாமதமாகத்தான் சம்பவ இடத்துக்கு வந்தனர் என்று பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.