உத்தரப் பிரதேச மாநிலம், சஹாரன்பூரில் கடந்த ஒரு மாதமாக தொடரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து அறிக்கை அளிக்குமாறு அந்த மாநில அரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், அங்கு அமைதி திரும்புவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விரிவான அறிக்கை அளிக்குமாறு மாநில அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்தத் தகவலை மத்திய அரசு வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.
சஹாரன்பூரில் இரு சமூகத்தினரிடையே கடந்த மாதத்தில் இருந்து மோதல் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. அங்கு இரு சமூகத்தினரிடையே கடந்த 5-ஆம் தேதி ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார். காவல் துறை அதிகாரி ஒருவர் உள்பட 15 பேர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து, அதே பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன் நிகழ்ந்த வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், மீண்டும் அந்தப் பகுதியில் கடந்த புதன்கிழமை வன்முறை மூண்டதில் சிலர் காயமடைந்தனர்.
தொடர் வன்முறைச் சம்பவங்களை அடுத்து, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோரை மாநில அரசு புதன்கிழமை பணியிடைநீக்கம் செய்தது. காவல் துறை ஆணையர் மற்றும் டிஐஜி ஆகியோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
மேலும், வன்முறைச் சம்பவம் தொடர்பாக வதந்திகள் பரவுவதைத் தடுப்பதற்காக, சஹாரன்பூர் மாவட்டத்தில் செல்லிடப்பேசி, இணையவழிச் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
400 கலவரத் தடுப்பு போலீஸார் விரைவு: இதனிடையே, உத்தரப் பிரதேச மாநில அரசு கேட்டுக் கொண்டதன் பேரில், சஹாரன்பூருக்கு 400 கலவரத் தடுப்புப் போலீஸாரை மத்திய அரசு வியாழக்கிழமை அனுப்பி வைத்தது என்று மத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அசோக் பிரசாத் கூறினார்.