மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் உறவினரது திருமணத்தில் மகாராஷ்டிர அமைச்சர் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மும்பை காவல் துறை அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, இதுதொடர்பாக உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளி தாவூத் இப்ராஹிமின் உறவினர் ஒருவரின் மகளுக்கும், மும்பை மாநகராட்சி முன்னாள் உறுப்பினரது மகனுக்கும் நாசிக் நகரில் அண்மையில் திருமணம் நடைபெற்றது. இதில் மகாராஷ்டிர அமைச்சர் கிரீஷ் மகாஜன், பாஜக எம்எல்ஏக்கள், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இது பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சச்சின் சாவந்த் கூறியதாவது:
தாவூத்துக்கு நெருக்கமானவர்கள்தான் அந்தத் திருமணத்தில் கலந்து கொண்டனர். எவரெவர் தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பில் உள்ளனர் என்று இதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். இந்த விவகாரம் தொடர்பாக உயர் நிலை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார் அவர்.
இதனிடையே, இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மகாராஷ்டிர டிஜிபி சதீஷ் மாத்தூர், "திருமணத்தில் பங்கேற்றவர்கள் தொடர்பான விவரங்களையும், அறிக்கையையும் நாசிக் போலீஸாரிடம் கேட்டுள்ளோம்; அதன் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படும்' என்றார்.