ஹரியாணாவில் இந்தியர் என்ற போர்வையில் சட்ட விரோதமாக தங்கி வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவரது பெயரிலான ஆதார் அட்டையும், பான் அட்டையும், பாகிஸ்தானிய கடவுச் சீட்டும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக, ஜஜ்ஜர் காவல்துறை கண்காணிப்பாளர் பி.சதீஷ் பாலன் தெரிவித்ததாவது:
பாகிஸ்தானின் சிந்து மாகாணம், லர்கானா நகரிலுள்ள ஹிந்து காலனியைச் சேர்ந்தவர் ராஜா. இவர், கடந்த 2013-இல் இந்தியா வந்துள்ளார். கடந்த ஆண்டுடன், இவரது விஸா காலம் முடிவடைந்தது. இந்நிலையில், பஹதூர்கர் பகுதியிலுள்ள இஸ்கான் கோயிலில் ராஜா கடந்த 9 மாதங்களாக தங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார் என்றார் பி.சதீஷ் பாலன்.
இந்தியர்களின் முக்கிய அடையாள ஆவணமாகக் கருதப்படும் ஆதார் அட்டையைப் பெறுவதில் சிரமங்கள் இருந்து வரும் நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் ஆதார் அட்டை வைத்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.