மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 12-ஆம் வகுப்பு தேர்வில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் அகில இந்திய அளவில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாணவி எம்.வி.தர்ஷனா 96.6 சதவீத மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியானது. இந்தத் தேர்வில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் கேரளத்தைச் சேர்ந்த ஆதித்யா ஆர் ராஜ், பி.வி.லஷ்மி ஆகியோர் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து சாதனை படைத்தனர்.
வலது கண் கருவிழி பாதிக்கப்பட்டவர் தர்ஷனா. இவருடைய மற்றொரு கண்ணும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. எனினும், இவருடைய தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சி காரணமாக இத்தகைய சாதனையைப் படைத்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகி உள்ளார்.
இதுகுறித்து தர்ஷனா கூறுகையில், "பார்வைத்திறன் பாதிக்கப்பட்டிருந்தபோதிலும் எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்துவந்த ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாடங்களைப் படிப்பதற்கு பூதக்கண்ணாடியைப் பயன்படுத்தினேன். வர்த்தகத்தில் மேற்படிப்பு முடித்து தொழிலதிபர் ஆக வேண்டும் என்பதே எனது விருப்பம்' என்றார்.