பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட அனைத்து அரசுத் துறைகளும், அதுதொடர்பான தகவல்களை வெளியிட வேண்டியது கட்டாயம் என்று மத்திய தகவல் ஆணையம் (சிவிசி) தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு புழக்கத்திலிருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாதவையாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அதிரடி அறிவிப்புக்குப் பிறகு, தகவல் ஆணையம் அதுகுறித்து முதல்முறையாக இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு கூறியதாவது: உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்களை, சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் கட்டாயம் வெளியிட வேண்டும்.
அந்த விவரங்களை மூடி மறைப்பது, பொருளாதாரத்தின் மீதான மோசமான சந்தேகங்களை ஏற்படுத்தும்.
இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், பண மதிப்பிழப்பு போன்ற ஒரு பொது நடவடிக்கையைச் சுற்றி, "பாகுபலி'யால் கூட உடைக்க முடியாத இரும்புக் கோட்டையை எழுப்புவது ஏற்புடையது அல்ல. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடிமகனும் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பும், அரசியல் சாசனக் கடமையும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் உள்ளது.
பண மதிப்பிழப்பு குறித்த தகவல்கள், நடவடிக்கைக்கான காரணம், பலன்கள், பாதிப்புகள் ஆகியவற்றை அதிகாரிகள் மறைக்கக் கூடாது என்றார் அவர்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, தில்லியிலுள்ள ஒரு தபால் நிலையத்தில் எவ்வளவு உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன என்று தகவலறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ராம்ஸ்வரூப் என்பவர் விவரம் கோரியுள்ளது குறித்து விசாரிக்கையில், ஸ்ரீதர் ஆச்சார்யலு இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.