அனல்மின் நிலைய பாய்லர் வெடித்து விபத்து: 15 பேர் சாவு, 100 பேர் படுகாயம்
உத்தரப்பிரதேச மாநிலத்தின் ரேபரேலி மாவட்டத்தில் அனல்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு புதன்கிழமை திடீரென ஏற்பட்ட விபத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர்.
மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் இருந்து சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவில் இந்த அனல்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 1,500 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
இந்த அனல்மின் நிலையத்தில் இருந்து 500 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. இங்குள்ள பாய்லர் ஒன்று திடீரென புதன்கிழமை வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தில் சிக்கி 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து உத்தரப்பிரதேச காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பாய்லரில் ஏற்பட்ட உயர் அழுத்தம் காரணமாக இவ்விபத்து நடத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000, லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 25,000 உடனடியாக நிதியுதவி அளிக்குமாறு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.