புதுதில்லி: கடும் குற்றப் பின்னணி உடையோர் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கலாம் என்று தெரிவித்து உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணையில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்த அஸ்வினி உபாத்யாயா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலமனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். அதில் அவர் கடும் குற்றப் பின்னணி உடையோர் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனுவில் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசு ஆகிய இருவரும் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன.
இந்நிலையில் இந்த மனு இன்று நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வின் முன்னால் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தேர்தல் ஆணையம் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கடும் குற்றப் பின்னணி உடையோர் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கலாம் என்பதை ஆதரிப்பதாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இது தொடர்பாக முன்பே மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் சார்பாக பரிந்துரை செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது இந்த வழக்கில் மத்திய அரசு என்ன பதில் மனு தாக்கல் செய்யய உள்ளது என்பதே முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.