கிச்சடி இந்தியாவின் தேசிய உணவாக அறிவிக்கப்பட்ட உள்ளதாக வியாழக்கிழமை சர்ச்சை ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
பலர் கிச்சடி என்ற வார்த்தையை ஹெஷ்டாக் உடன் ட்ரெண்ட் செய்தனர். இட்லியை தேசிய உணவாக அறிவிக்க வேண்டும் என்று சிலர் வாதிட்டனர்.
பரோட்டா, பிரியாணி எல்லாம் எங்கே போனது என்று உணவுப் பிரியர்கள் மல்லுகட்டினர். அதை கிச்சடி என்றும் கூறலாம் உப்புமா என்றும் கூறலாம், உண்மைதான் உப்புமா தான் தேசிய உணவு என்றும் சிலர் காமெடி செய்தனர்.
இந்நிலையில், கிச்சடியை தேசிய உணவாக அறிவிக்கவில்லை, நிஜத்தில் தேசிய உணவு என்ற ஒரு வார்த்தையே தவறு எனவும் மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹர்ஸிம்ராத் கௌர் பாதல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
கிச்சடியை தேசிய உணவாக யாரும் அறிவிக்கவில்லை. உண்மையில் தேசிய உணவு என்பது இங்கு இல்லை. அதை தேசிய உணவாக அறிவிக்க வேண்டிய கட்டாயமும், அவசியமும் தற்போது இல்லை.
இந்தியாவில் சர்வதேச உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது. அதில் இந்தியா சார்பில் கிச்சடி சமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதைத்தான் கிச்சடி தேசிய உணவாக அறிவிக்கப்பட உள்ளது என்பது போன்ற வதந்தி கிளறப்பட்டு உருவெடுத்தது என்றார்.