ரஷியாவைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனையும், மகளிர் டென்னிஸில் முன்னணி வீராங்கனைகளில் ஒருவராக இருப்பவர் மரியா ஷரபோவா.
இவர் சமீபத்தில் ஊக்கமருத்து பயன்படுத்திய சர்ச்சை தொடர்பாக இடைக்கால நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் டென்னிஸ் விளையாட்டுக்குத் திரும்பியுள்ளார்.
இந்நிலையில், இவர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு தில்லி காவல்துறைக்கு தில்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இவ்விகாரம் தொடர்பாக தில்லி உயர் நீதிமன்றம் கூறுகையில்,
ரியல் எஸ்டேட் மோசடி தொடர்பாக ரஷியாவைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்.
ரூ. 53 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக குர்கானைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஹோம்ஸ்டீட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்மென்ட் பி.லிமிடட், அதன் பணியாளர்கள் மற்றும் விளம்பரத் தூதர் மரியா ஷரபோவா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
பணம் பெற்றுக்கொண்டு இதுவரை பணியைத் துவங்காமல் இருப்பது தொடர்பாக வாடிக்கையாளர் ஒருவர் அளித்த மனுவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றது.
முன்னதாக, அமரப்பல்லி என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக அதன் விளம்பரத் தூதர், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன.
இதனால் அதன் விளம்பரத் தூதர் பதவியில் இருந்து தோனி பின்னர் விலகியது குறிப்பிடத்தக்கது.