ஹிமாச்சலப்பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், திங்கள்கிழமை அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:
பிரதமர் மோடி அடுத்தவர் உழைப்பை திருடும் குணம் கொண்டவர். கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே என்று கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பிரமதர் மோடி அதற்கு நேர் எதிரானவர்.
அடுத்தவர் கடமையில் இருந்து விளையும் பலனை மட்டும் தான் அனுபவிக்க நினைப்பவர். அவர் எந்தக் காரியத்தையும் செய்ய மாட்டார். ஹிமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றிபெறும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்றார்.
முன்னதாக, அங்கு பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, ஹிமாச்சலப்பிரதேசத்தில் பாஜக வெற்றி நிச்சயம். ஏனெனில் காங்கிரஸ் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டது. இனி 100 வருடங்கள் ஆனாலும் காங்கிரஸ் கட்சியால் எங்கும் வெற்றிபெற முடியாது என்று சூளுரைத்தார்.