புதுதில்லி: நாட்டில் நிலவும் ஊழலை ஒழிக்க பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒற்றைத் தீரவு அல்ல என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று தில்லியில் கூறியதாவது:
நாட்டில் நிலவும் ஊழலை ஒழிக்க பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒற்றைத் தீரவு அல்ல; அப்படி இருக்கவும் முடியாது. ஆனால் இது நமக்கு ஒரு புதிய பாதையை அளித்திருக்கிறது. அதன்மூலம் நாம் பணமற்ற பொருளாதாரம் நோக்கி செல்லலாம்; அத்துடன் தனி நபர்கள் வரி செலுத்தும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அத்துடன் தீவிரவாத நடவடிகைகளுக்கான நிதி ஆதாரம் வெகுவாக சுருக்கப்பட்டுள்ளது.
நமது பொருளாதாரம் தற்பொழுது செல்லும் பாதையானது எனக்கு மிகுந்த திருப்தியளிக்கிறது. நாட்டின் பொருளாதாரத்திற்கும், அதன் எதிர்காலத்திற்கும் இத்தகைய மாற்றம் அவசியம் என்று பாரதிய ஜனதா கட்சி கருதுகிறது. நாட்டில் புழக்கத்தில் உள்ள பண நோட்டுகளில் 86% அதிக மதிப்பு கொண்டதாக இருக்கும் பொழுது, பெரும்பாலான பரிவர்த்தனைகளை ரொக்கமாக நடக்கும் பொழுது அதன் மூலம் ஏமாற்றுக்காரர்கள் உருவாக்கும் பொருளாதாரச் சுமையினை கூட, வரி செலுத்துவோர் சுமக்க வேண்டிய நிலை உண்டாகிறது.
நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வேண்டிய நிதி ஆதாரமானது இப்படி தனிப்பட்ட சிலரின் பண பெட்டியினுள் குவிந்திருப்பது சரியல்ல. நமது திட்டத்தினால் ஊழல் முற்றிலும் ஒழியா விட்டாலும், ஊழலை செய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்து விடும்.
இவ்வாறு ஜேட்லி தெரிவித்தார்.