புதுதில்லி: பணியிடத்தில் பெண்கள் சந்திக்க நேரும் பாலியல் தொல்லை குறித்து ஆன்லைனில் புகார் கொடுக்க தனி இணையதளம் ஒன்றினை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை இன்று துவக்கியுள்ளது.
இந்த சிறப்பு இணையதளத்துக்கு 'SHe-box' என்று பெயரிடப்பட்டுள்ளது. sexual harassment electronic box என்பது இதன் விளக்கமாகும். இந்த சிறப்பு இணையதளமானது மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்துடன் உள்ளிணைந்து செயல்படும்.
இந்த அமைச்சரவையின் கீழ் செயல்படும் தனி குழு ஒன்று, இங்கு ஆன்லைனில் பதியப்படும் புகார்களை, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உள்ளக விசாரணைக் குழுவின் பார்வைக்கு அனுப்பி வைக்கும்.
பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் சட்டம் 2013-ன் படி, பத்து அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட எந்த ஒரு நிறுவனமும், தங்களது நிறுவனத்தில் இத்தகைய புகார்களை விசாரிக்க 'உள்ளக விசாரணைக் குழு' என ஒன்றை தனியாக நிறுவ வேண்டியது அவசியமாகும்.
இதன் மூலம் புகார் அளித்தவர்கள் புகாரின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து இந்த தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இதன் துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை அமைச்சர் மேனகா காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், முன்னதாக அரசுப் பணியில் இருக்கும் பெண்களுக்கு மட்டும் துவங்கப்பட்ட இணையப் பக்கமானது தற்பொழுது தனியார் துறையில் பணிபுரிவோருக்குமான ஒன்றாக விரிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.