கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்காரணமாக புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என ஒரே இரவில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
கறுப்புப் பணத்தை மீட்கவும், பயங்கரவாத செயல்களை தடுக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவுபெற்றதை அடுத்து இந்த நாளை கறுப்புப் பண ஒழிப்பு நாளாக பாஜக அறிவித்துள்ளது. ஆனால், இது நாட்டின் கறுப்பு தினம் எனக் கூறி எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தியது.
இதுதொடர்பாக சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் கூறியாதவது:
நவம்பர் 8-ந் தேதி கறுப்பு தினம் கொண்டாடியவர்கள் அனைவரும் கறுப்புப் பண ஆதரவாளர்கள் தான். அவர்கள் செய்த கணக்கில் அடங்காத ஊழலை மறைக்கவே இவ்வாறு நாடகமாடுகிறார்கள். மற்றபடி நாட்டு மக்களுக்கு இது ஒரு நல்லநாள்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு இது ஒரு சாதனைத் திருநாள். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு நாட்டின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் இதனால் பயனடைந்த பயங்கரவாத, நக்ஸல் நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்டு சட்டம், ஒழுங்கு மேம்பட்டு வருகிறது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்ட பிறகு வங்கிகளில் ரூ. 3 லட்சம் கோடி வைப்பு நிதி ஏற்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 24.7 சதவீதம் உயர்ந்துள்ளது. இது தினசரி உயர்ந்தும் வருகிறது. இதன்மூலம் புதிதாக 56 லட்சம் பேர் வரி செலுத்தத் துவங்கியுள்ளனர். சுமார் 50 லட்சம் தொழிலாளர்கள் வங்கிக் கணக்குத் துவங்கி உள்ளனர் என்றார்.