இந்திராணி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோருக்குச் சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரிய விதிகளுக்குப் புறம்பாக வெளிநாட்டில் இருந்து கடந்த 2007-ம் ஆண்டு ரூ. 305 கோடி நிதி பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பான விசாரணை நடவடிக்கைகளைத் தவிர்க்க மத்திய முன்னாள் அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உதவியதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன.
இதுதொடர்பாக நேரில் ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது.
இருப்பினும் அவர் ஆஜராகத காரணத்தால் வெளிநாடுகளுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டது. மேலும் ஜூலை 18-ந் தேதி விமானநிலையங்களில் அவரை தேடப்படும் நபராக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனிடையே, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையின்போது, தன்னை பிரிட்டனுக்கு செல்ல அனுமதிக்குமாறு கார்த்தி சிதம்பரம் மனு அளித்திருந்தார். புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது மகளை சேர்ப்பதற்காக அந்நாட்டுக்குச் செல்ல வேண்டியிருப்பதாக அதில் அவர் குறிப்பிட்டிருந்ததார்.
அந்த மனு மீதான விசாரணையின் போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், கார்த்தி சிதம்பரம் பிரிட்டனுக்கு செல்ல அனுமதிக்கக் கூடாது என வாதிட்டார். அவ்வாறு அனுமதித்தால் அங்குள்ள வங்கிகளில் அவருக்கு எதிராக உள்ள ஆதாரங்களை அழிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறினார்.
இந்நிலையில், இவ்விகாரம் தொடர்பாக நவம்பர் 6-ந் தேதி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நவம்பர் 9-ந் தேதி வரை இந்த தடை தொடரும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இதுதொடர்பாக சிபிஐ விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இவ்வழக்குத் தொடர்பான விசாரணையின் போது கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல 4 அல்லது 5 நாட்களுக்கு அனுமதி வழங்க ஏதேனும் வாய்ப்புள்ளதா என சிபிஐ-யிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், இதனால் வழக்கில் எவ்வித சிக்கலும் ஏற்படாத வகையிலும், கார்த்தி சிதிம்பரம் தப்பிச் செல்ல இயலாத வகையிலும், தனது செல்வாக்கை பயன்படுத்தி வேறு நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத வகையிலும் இந்த அனுமதி வழங்க முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து முடிவு எடுக்குமாறு தெரிவித்துள்ளது.