புதுதில்லி: நீதிபதிகள் பெயரால் லஞ்சம் வாங்கியது தொடர்பான வழக்கினை ஐந்து மூத்த நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரி சேர்க்கை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றில், சாதகமான தீர்ப்பினை பெறுவதற்காக நீதிபதிகள் பெயரால் லஞ்சம் வாங்கப்பட்டதாக புகார் எழுந்தது.இந்த விவகாரத்தினை விசாரித்த சிபிஐ, ஓய்வு பெற்ற ஒடிஷா உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரும் வேறு சிலரும் சேர்ந்து இதில் சதி செய்திருப்பதாக குற்றம் சாட்டியிருந்தது.
இது தொடர்பாக செப்டம்பர் 19-ஆம் தேதியன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும்,அந்த விசாரணையானது நீதிமன்றத்தால் கண்காணிக்கப்பட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.இது தொடர்பாக மத்திய அரசுக்கும் சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் இன்று மூத்த வழக்கறிஞரும், உச்ச நீதிமன்ற பார் அசோஸியேஷன் முன்னாள் தலைவருமான துஷ்யந்த் தவே இந்த மனுவினை இன்று அவசர மனுவாக விசாரிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தார். அவரது மனுவினை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் செல்லமேஸ்வர் மற்றும் அப்துல் நஷீர் அடங்கிய அமர்வானது இந்த வழக்கினை ஐந்து மூத்த நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டது.
அத்துடன் இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சீலீட்ட கவரில் பத்திரமாக பாதுகாக்கும்படி சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் வரும் நவம்பர் 13-ஆம் தேதி விசாரணை நடைபெறும் பொழுது அவற்றை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.