ஜிஎஸ்டி கவுன்சிலின் 23-ஆவது கூட்டம் அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் மேலும் சில பொருள்களுக்கு சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டது.
ஜிஎஸ்டி வரி கடந்த ஜூலை 1-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு, மாதம்தோறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஜிஎஸ்டி தொடர்பாகக் கூறப்படும் அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு, அவற்றுக்குத் தீர்வு காணப்பட்டு வருகிறது.
அவ்வகையில் இம்மாதம் நடைபெற்ற 23-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் முடிவில் 178 பொருட்களின் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. 13 பொருட்களின் மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டது.
மேலும் 6 பொருட்களுக்கான வரி 18-ல் இருந்து 5 சதவீதமாகக் குறைப்பு. 8 பொருட்களின் மீதான வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைப்பு. 6 பொருட்களுக்கு 5 சதவீதத்தில் இருந்து முற்றிலும் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து உணவகங்களுக்கும் ஜிஎஸ்டி 5 சதவீதமாகக் குறைப்பு. இருப்பினும் உணவகங்களின் மீதான வரிவிதிப்பில் இருந்து எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை.
இந்தப் புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையானது வரும் நவம்பர் 15-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.