புதுதில்லி: தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசின் அளவைக் கட்டுப்படுத்தும் பொருட்டு மாநில அரசு கொண்டு வர உத்தேசித்திருந்த வாகன கட்டுப்பாட்டு திட்டத்துக்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளளது.
தில்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசின் அளவானது அபாயக் கட்டத்தினை நெருங்கி வருகிறது. இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.அதேபோல் தில்லி உயர் நீதிமன்றமும், தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் அதிகரித்து வரும் காற்று மாசினைக் கட்டுப்படுத்தும் பொருட்டு பல்வேறு ஆலோசனைகளையும், உத்தரவுகளையும் வழங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக தில்லியில் வரும் ஞாயிறு முதல் வாகனங்களின் பதிவெண் அடிப்படையிலான கட்டுப்பாட்டு திட்டத்தினைக் கொண்டு வர அம்மாநில அரசு உத்தேசித்திருந்தது.
இந்நிலையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயமானது இன்று ஒரு உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதன்படி மாநில அரசு கொண்டு வர உத்தேசித்திருந்த வாகன கட்டுப்பாட்டு திட்டத்துக்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளளது. இந்த திட்டத்தின் செயல்திறன் மற்றும் ஆக்கப் பூர்வ விளைவுகள் தீர்ப்பாயத்துக்கு திருப்தி ஏற்படும்படி நிரூபிக்கப்டாதவரை அதனை செயல்படுத்த அனுமதிக்க முடியாது என்றும் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.