தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்காக, தேசிய போட்டித் தேர்வுகள் அமைப்பை (என்டிஏ) ஏற்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் தேர்வை, இந்திய மருத்துவக் கவுன்சில் சார்பில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தி வருகிறது.
இதேபோல், பல்கலைக்கழக மானியக் குழுவின் சார்பில் நடத்தப்படும் நெட் தேர்வு, மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு(சிடிஇடி), ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான கூட்டு நுழைவுத் தேர்வு (ஜேஇஇ), ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு உள்பட 9 வகையான நுழைவுத் தேர்வுகளை சிபிஎஸ்இ நடத்தி வருகிறது.
இனி, இந்த நுழைவுத் தேர்வுகள் அனைத்தையும், தேசிய போட்டித் தேர்வுகள் அமைப்பே நடத்தும். இதுதொடர்பாக, மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கு, தேசிய போட்டித் தேர்வுகள் அமைப்பு உருவாக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடந்த பிப்ரவரி மாதம், தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி, தேசிய போட்டித் தேர்வுகள் அமைப்பு உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த அமைப்புக்கு முதல் கட்டமாக, ரூ. 25 கோடி நிதியை மத்திய அரசு வழங்கும்.
இந்த அமைப்பு, ஆண்டுக்கு இரு முறை, இணையதளம் வாயிலாக நுழைவுத் தேர்வுகள நடத்தும்.
கிராமப்புற மாணவர்களும் பங்கேற்கும் வகையில், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், சிறு நகரங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.
இந்த அமைப்பை ஏற்படுத்துவதன் மூலம், சிபிஎஸ்இ, அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் ஆகியவற்றின் பணிச் சுமைகள் குறையும்.
மேலும், போட்டித் தேர்வுகள் நடத்தும் முறையில் நம்பகத்தன்மை உறுதிசெய்யப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.