எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த 3 மீனவர்களை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) அதிகாரிகள் கைது செய்தனர். 5 படகுகளும் கைப்பற்றப்பட்டன.
இதுகுறித்து பிஎஸ்எஃப் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
சர்வதேச கடல் பகுதியையொட்டியுள்ள கட்ச் மாவட்டம், ஹராமி நாலா கழிமுகப் பகுதியில் தடையை மீறி பாகிஸ்தானைச் சேர்ந்த மீனவர்கள் அவ்வப்போது மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில், அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தடை செய்யப்பட்ட பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 3 மீனவர்களைக் கண்டனர். இதையடுத்து, அவர்களை வீரர்கள் கைது செய்தனர். அவர்கள் வந்த படகும் பறிமுதல் செய்யப்பட்டது. மீனவர்கள் மூவரும் உள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
பிஎஸ்எஃப் அதிகாரிகளுடன் ஆண்டுக்கு இரு முறை நடக்கும் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்றிருந்தபோது இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.