ஹஜ் பயணத்துக்கான விண்ணப்பங்கள் இனி டிஜிட்டல் முறையில் விநியோகிக்கப்படும் என்று மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
அடுத்த ஆண்டு முதல் ஹஜ் பயணத்துக்கான வழிமுறையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளது. எனவே ஹஜ் பயணத்துக்கு போதிய கால அவகாசம் இருந்தும் முன்கூட்டியே அறிவிக்கப்படுகிறது.
இனி வரும் காலங்களில் ஹஜ் பயணத்துக்கான விண்ணப்பங்கள் ஹஜ் கமிட்டியின் இணையப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதிலிருந்து தேவைப்படுவோர் விண்ணப்பிக்கலாம். 2018-ம் ஆகஸ்ட் மாதம் 19-ந் தேதி முதல் 24-ம் தேதி வரை ஹஜ் பயண அட்டவணையாகும். இது மாறுதலுக்கு உட்பட்டது.
இதற்கான விண்ணப்பங்கள் அதன் இணையதளப் பக்கத்தின் மூலமாக நவம்பர் 15-ந் தேதி முதல் டிசம்பர் 7-ந் தேதி வரை பதிவேற்றம் செய்யப்படும். இப்பயணத்திட்டத்துக்கு தயாராகும் விதமாக இது 2 மாதங்கள் முன்கூட்டியே அறிவிக்கப்படுகிறது.
மேலும் ஹஜ் பயணம் மேற்கொள்ள இந்தியா முழுவதிலும் இருந்து 21 பயண முனையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. சில இடங்கள் தேவைக்கு ஏற்ப விரிவுபடுத்தப்படவுள்ளது.
ஸ்ரீநகரில் உள்ள மக்கள் அங்கிருந்தே பயணம் மேற்கொள்ளலாம். இருப்பினும் அவர்கள் தில்லியில் இருந்து பயணிக்கலாம். ஸ்ரீநகரில் இருந்து பயணக்கட்டணமாக ரூ. 1,10,000 வசூலிக்கப்படும். அதுவே தில்லியில் இருந்து ரூ. 73,000 வசூலிக்கப்படும் என்றார்.