ஹைதராபாத்: செம்மரம் கடத்தும் எண்ணத்துடன் ஆந்திர வனப்பகுதிக்குள் வருபவர்கள் யாராக இருந்தாலும் சுடப்படுவார்கள் என்று ஆந்திர செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி காந்தா ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆந்திர மாநில வனப்பகுதிகளில் அதிக அளவில் கிடைக்கும் செம்மரமானது பல்வேறு காரணங்களுக்காக சர்வதேச சந்தையில் அதிக மதிப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால் இதனை வளர்க்கவும் வெட்டவும் தடை உள்ளது. இதன் காரணமாக இதனைச் சட்ட விரோதமாக வெட்டி விற்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தமிழகத்தின் சேலம், ஏற்காடு, திருவண்ணாமலை, ஜவ்வாது மலை ஆகிய பகுதிகளில் இருந்து தமிழர்கள் இடைத்தரகர்கள் மூலம் குறைந்த கூலிக்கு செம்மரம் வெட்டும் பணிக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அப்படி வருபவர்களை ஆந்திர மாநில வனத்துறையினர் தாக்குதல், கைது செய்தல் உள்ளிட்ட சம்பவங்களும் நடைபெறுவது உண்டு.
அதன் உச்ச கட்டமாக கடந்த 2015-ஆம் ஆண்டு ஆந்திர மாநில சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாகக் கூறி 20 தமிழர்கள் ஆந்திர காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆந்திர செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி காந்தா ராவ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது அவர் செம்மரம் கடத்தும் எண்ணத்துடன் ஆந்திர வனப்பகுதிக்குள் வருபவர்கள் யாராக இருந்தாலும் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.