ஜம்மு-காஷ்மீருக்கும், அதன் குடிமக்களுக்கும் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370 மற்றும் 35 - ஏ ஆகிய பிரிவுகளை நீக்க வேண்டும் என்று காஷ்மீர் பண்டிட்டுகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் நீண்டகாலமாக வசித்து வந்த காஷ்மீர் பண்டிட் சமூகத்தினர் பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருந்து விரட்டப்பட்டனர். தற்போது அவர்கள், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வசிக்கின்றனர். இதனிடையே, ஜம்மு-காஷ்மீரில் தாங்கள் மீண்டும் குடியேற வழிவகை செய்யக் கோரி அண்மைக்காலமாக அவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜம்முவில் காஷ்மீர் பண்டிட்டுகள் சார்பில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன் பின்னர், பனூன் காஷ்மீர் அமைப்பின் (இடம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிட்டுகளின் கூட்டமைப்பு) தலைவர் அஷ்வனி குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியக் குடிமக்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் அனைத்தையும் மீறும் வகையில் 370 மற்றும் 35 ஏ ஆகிய பிரிவுகள் அமைந்திருக்கின்றன. இவையாவும், ஜம்மு-காஷ்மீருக்கு முந்தைய காலங்களில் வழங்கப்பட்டிருக்கும் தேவையற்ற சுமையாகும். அந்தச் பிரிவுகள் அரசியல் சாசனத்திலிருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றார் அஷ்வனி குமார்.
அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவானது ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்குகிறது. அதேபோல், 35 ஏ பிரிவானது, ஜம்மு-காஷ்மீர் குடிமக்கள் யார் என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை அம்மாநிலச் சட்டப்பேரவைக்கு அளிக்கிறது.