லக்னௌ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் இனி 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கபடுவதாக அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மாநில அரசின் கல்வித்துறை சார்பாக அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் சுற்றிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மாநிலத்தில் தற்பொழுது 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயிலும், பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் அனைவரும் வரும் 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் தங்களுக்கென ஆதார் கார்டு எடுத்து விட வேண்டும். அவர்கள் பொதுத் தேர்வுக்கு பதிவு செய்யும் போதும், தேர்வு எழுத வரும் போதும், கண்டிப்பாக ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும்.
தேர்வில் ஆள்மாறாட்டத்தை தடுக்கும் பொருட்டே ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படுகிறது. ஒருவேளை ஏதேனும் ஒரு பள்ளி மாணவர் ஆதார் இல்லாமல் தேர்வு எழுத இயலாத சூழல் உருவானால், அதற்கு அந்த பள்ளியின் முதல்வர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.