ரேசன் பொது விநியோகத் திட்டம் குறித்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை அதிகாரிகளுடன் மீளாய்வு செய்தார்.
தில்லி தலைமைச் செயலகத்தில் முதல்வர் கேஜரிவால் தலைமையில் இந்த மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, ரேசன் பொது விநியோகத் திட்டத்தில் பயனாளிகளுக்கு இயந்திரம் மூலம் ரேசன் பொருள்களை வழங்குவது குறித்து செய்முறையுடன் விளக்கப்பட்டது.
கைவிரல் ரேகைப் பதிவு, ஆதார், பயனாளிகளின் உருவம் ஆகியவற்றின் அடிப்படையில் ரேசன் பொருள்களை வழங்கும் முறையும் காண்பிக்கப்பட்டது.
பயனாளியின் கைவிரல் ரேகையை அதற்கான சிறு கையடக்க வடிவ இயந்திரத்தில் பதிவு செய்தவுடன், ரேசன் பொருள்கள் நிரப்பி வைக்கப்பட்ட இயந்திரத்திற்கு உத்தரவுகள் அனுப்பப்பட்டு தேவையான அளவு பொருள்கள் வழங்கப்படும்.
இந்த இயந்திரத்தைப் பார்வையிட்ட முதல்வர் கேஜரிவால், இந்த இயந்திரம் செயல்பாட்டுக்கு வந்தால் ரேசன் பொருள்கள் பயனாளிகளுக்கு உரிய அளவில் கிடைப்பதுடன், திருட்டும் தடுக்கப்படும் என்றார்.
இதேபோன்று, பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று ரேசன் பொருள்களை நேரடியாக வழங்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும் அதிகாரிகளுடன் முதல்வர் கேஜரிவால் ஆலோசனை மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர்கள் இம்ரான் ஹுசேன், ராஜேந்தர் பால், தலைமைச் செயலர் எம்.எம். குட்டி மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.