இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய (எஃப்எஸ்எஸ்ஏஐ) உரிமம் இன்றி இயங்கும் உணவகங்களுக்கு சீல் வைக்கப்படும் என்று அந்த அமைப்பின் தலைவர் பவன்குமார் அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் அமைந்துள்ள அன்னதானக் கூடங்களுக்கும் இது பொருந்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற பவன்குமார் அகர்வால் இதுதொடர்பாகக் கூறியதாவது:
நாட்டில் உள்ள 40 சதவீத உணவகங்களும், ரெஸ்டாரண்டுகளும் 'எஃப்எஸ்எஸ்ஏஐ' உரிமம் இன்றி செயல்பட்டு வருகின்றன. இதில் பெரும் குழப்பம் இருந்து வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெற்றால் மட்டும் போதும் என ஹோட்டல் உரிமையாளர்கள் கருதுகின்றனர். ஆனால், உண்மை நிலை அப்படியல்ல.
எந்த வகையான உணவுப் பொருள்களை விற்பனை செய்தாலும் 'எஃப்எஸ்எஸ்ஏஐ' உரிமம் பெறுவது அவசியம். இது வழிபாட்டுத் தலங்களில் இலவச உணவு வழங்கும் இடங்களுக்கும் பொருந்தும். அவ்வாறு இல்லாமல் விதிகளுக்குப் புறம்பாக இயங்கும் உணவு விடுதிகள் சட்டவிரோதமானவை. இதுதொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை மேலும் விரிவுபடுத்தப்படும். அடுத்த மூன்று மாதங்களுக்குள் அனைத்து ஹோட்டல்களும் 'எஃப்எஸ்எஸ்ஏஐ' உரிமம் பெற்றிருப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு உரிமம் பெறாத உணவகங்களுக்கு சீல் வைக்குமாறும் அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர்.