ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், ராணுவ வீரரும், பயங்கரவாதி ஒருவரும் பலியாகினர்.
இதுகுறித்து இந்திய ராணுவ அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது:
குல்காம் மாவட்டம், நௌபக் குண்ட் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படை வீரர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதை கண்ட பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். இதற்கு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்தனர். இதையடுத்து, இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இந்தச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் பலத்த காயமடைந்தார். அவரை பாதுகாப்புப் படையினர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபோது பலியானார்.
இந்தச் சண்டையில், பயங்கரவாதி ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டார். தொடர்ந்து அங்கு இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல், புல்வாமா மாவட்டம், திராலிலுள்ள லாம் கிராமத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனர். அப்போது பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது. தொடர்ந்து அங்கு இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நீடித்து வருகிறது என்று இந்திய ராணுவ அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.